2014-10-28 15:18:28

உலகத் தாராளமயமாக்கலின் மிகப் பெரிய சவால்களில் ஒன்று குடியேற்றம்


அக்.28,2014. உலகத் தாராளமயமாக்கலின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக குடியேற்றம் இருக்கின்றவேளை, குடியேற்றதாரர்மீது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டினால் மட்டும் போதாது, மாறாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைதியைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்
உலகத் தாராளமயமாக்கலும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும் என்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற பொது அமர்வில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலகில் பொருளாதாரம் சமமாகப் பங்கிடப்படும் ஓர் ஒழுங்குமுறையை அமைப்பதும் முக்கியம் என்பதை வலியுறுத்திய பேராயர் Auza அவர்கள், உலகத் தாராளமயமாக்கல், உலகை ஒரு கிராமமாகச் சுருக்கினால் நாம் எல்லாரும் ஒருவர் ஒருவருக்கு உதவும் ஆட்களாக மாறவும் வேண்டும் என்றும் கூறினார்.
இன்று உலகில் 2 கோடியே 70 இலட்சம் பேர் அடிமைத்தன நிலைகளில் வாழ்கின்றனர், ஒவ்வோர் ஆண்டும் 20 இலட்சம் பெண்கள் பாலியல் தொழிலுக்காக வியாபாரம் செய்யப்படுகின்றனர், மனிதஉறுப்பு வணிகத்திற்காக சிறார் உட்பட பலர் பயன்படுத்தப்படுகின்றனர், இத்தகைய நவீன அடிமைத்தனங்கள் உலகத் தாராளமயமாக்கலுக்கு எதிரானவை என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Auza.
உலகத் தாராளமயமாக்கலின் பயனாக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலாக்கள் பற்றியும் குறிப்பிட்ட பேராயர், இவற்றில் கலாச்சாரச் சுற்றுலா 40 விழுக்காடாக உள்ளது என்றும், இவை நாணயமாற்றுச் சந்தைமுறையாக மாறிவிடக் கூடாது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.