அக்.28,2014. கடந்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் ஆண்-பெண் பாலின வேறுபாட்டில் இடைவெளி
குறைந்துள்ளதால், அரசியலிலும், பணியிடங்களிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது
என்று உலக பொருளாதார நிறுவனமான WEF அறிவித்துள்ளது. உலகில் பாலினச் சமத்துவம் குறித்து
ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள WEF நிறுவனம், 2005ம் ஆண்டிலிருந்து 105 நாடுகளில்
ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. பொருளாதாரக் கூறுகள்,
நலவாழ்வு, கல்வி, அரசியலில் பங்கேற்பு ஆகிய தலைப்புக்களில் 142 நாடுகளில் ஆய்வு நடத்தி
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது WEF நிறுவனம். இந்த ஆய்வின்படி, ஐஸ்லாந்து நாடு,
ஆறாவது ஆண்டாக முதலிடத்திலும், ஏமன் நாடு கடைசி இடத்திலும் இருந்து வருவதாகத் தெரிகிறது. இலங்கை,
மாலி, குரோவேஷியா, மாசிடோனியா, ஜோர்டன், டுனிசியா ஆகிய ஆறு நாடுகளில், 2005ம் ஆண்டிலிருந்து
பாலின இடைவெளி அதிகரித்திருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பெண்களின் அரசியல்
பங்கேற்பில் இந்தியா 15வது இடத்திலும், அதேநேரம், அமெரிக்க ஐக்கிய நாடு 54வது இடத்திலும்,
பிரிட்டன் 33வது இடத்திலும் உள்ளன எனவும் உலக பொருளாதார நிறுவன ஆய்வு கூறுகின்றது.