நைஜீரியாவில் மனித வாழ்வு மிக மலிவான விற்பனைப் பொருளாக உள்ளது
அக்.25,2014. நைஜீரியாவில் போக்கோ ஹாராம் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பால் கடுமையாய்த்
தாக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதற்கு அரசு திறனற்று உள்ளது எனக் குறை கூறியுள்ளார் அந்நாட்டு
ஆயர் ஒருவர். போக்கோ ஹாராம் அமைப்பால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மாய்துகுரி மறைமாவட்ட
மக்களின் நிலைமை குறித்து விளக்கிய ஆயர் ஆலிவர் தோமே அவர்கள், அந்நாட்டில் மனித வாழ்வு
மிக மலிவான விற்பனைப் பொருளாக நோக்கப்படுகிறது என்று கூறினார். நைஜீரியாவின் வட கிழக்குப்
பகுதியின் நகரங்களையும், கிராமங்களையும் போக்கோ ஹாராம் தீவிரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து,
பலர் காடுகளில் அல்லது மலைக்குகைகளிலும், இன்னும் சிலர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
வீடுகளிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார் ஆயர் தோமே. மக்கள் தினமும் இறக்கின்றனர்,
பல நேரங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு ஆள்கள் இல்லாமல் உடல்கள் அழுக விடப்படுகின்றன,
வீடுகளும் சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன, தங்களின் தந்தை நாட்டிலே அடிமைகளாகவும்,
கைதிகளாகவும் மக்கள் வாழ்கின்றனர் எனவும் மாய்துகுரி மறைமாவட்ட ஆயர் விவரித்துள்ளார்.