அக்.24,2014. உலக அளவில் கடந்த 26 வருடங்களாக எடுக்கப்பட்டுவரும் போலியோ நோய் ஒழிப்பு
நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறார் அதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர்
என்று ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் கூறியது. அக்டோபர் 24, இவ்வெள்ளியன்று
கடைப்பிடிக்கப்பட்ட உலக போலியோ நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளரிடம் அறிக்கை
சமர்ப்பித்த யூனிசெப் அமைப்பு, போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளினால் பதினைந்து இலட்சம்
சிறாரின் வாழ்வு காப்பாற்றப்பட்டிருந்தாலும், ஏறக்குறைய ஒரு கோடிப் பேர் இந்நோயின் பாதிப்பை
அனுபவித்து வருகின்றனர் என்று கூறியது. 1988ல் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த
இந்நோயாளரின் எண்ணிக்கை, 2013ல் 416 ஆகவும், இவ்வாண்டில் 243 ஆகவும் குறைந்துள்ளது எனவும்
யூனிசெப் கூறியது. ஒவ்வோர் ஆண்டும் ஐம்பது கோடிச் சிறாருக்கு, போலியோ நோய்த் தடுப்பு
மருந்துகளை அளித்து வருகிறது யூனிசெப் அமைப்பு.