2014-10-24 15:25:59

அக்.25,2014. புனிதரும் மனிதரே : விசுவாசத்தைப் பரப்பிய அடிமைகள்(St. Frumentius)


நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த Frumentius, Aedesius என்ற இரு சகோதரச் சிறுவர்கள் தனது மாமா Meropius அவர்களுடன், தீர் பகுதியிலிருந்து எத்தியோப்பியாவுக்கு செங்கடல் வழியாகச் சென்றனர். தீர் பகுதி தற்போதைய லெபனோன் நாடாகும். இக்கடல் பயணத்தில் அவர்கள் சென்ற கப்பல் ஒரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு அனைவரும் கொலை செய்யப்பட்டனர். ஆனால் Frumentius, Aedesius என்ற இரு சகோதரர்களை மட்டும் கொலைசெய்யாமல் அடிமைகளாக Axum அரசரிடம் அழைத்துச் சென்றனர் கொலையாளிகள். இவ்விருவரும் அரசரின் நன்மதிப்பை விரைவில் பெற்று, நம்பிக்கைக்குரிய பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர். Axum அரசர் தான் இறப்பதற்கு முன்னர் இந்த அடிமைச் சகோதரர்களை விடுதலை செய்தார். எனினும் கைம்பெண்ணாக விடப்பட்ட அரசி, இவ்விரு சகோதரர்களை அரண்மனையிலேயே தங்கச் சொல்லி, தனது இளம் வாரிசு அரசர் Ezanaவுக்கு கல்வியறிவு புகட்டி, இந்த இளவரசரின் நிர்வாகத்திலும் உதவிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவ்விருவரும் அங்கேயே தங்கினர். குறிப்பாக, Frumentius தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கிறிஸ்தவத்தைப் பரப்பினார். முதலில் அந்நாட்டிலிருந்த கிறிஸ்தவ வணிகர்கள் தங்கள் விசுவாசத்தைப் பொதுவில் அறிவிக்குமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார் Frumentius. பின்னர் அவ்வூர் மக்கள் சிலரையும் மனந்திருப்பினார். இளவரசருக்கு வயது வந்தபோது Aedesius தீர் திரும்பி அங்குக் குருவாகி அங்கேயே மறைப்பணியைத் தொடர்ந்தார். ஆனால் Frumentius, எகிப்தின் அலெக்சாந்திரியா சென்று முதுபெரும் தந்தை புனித அத்தனாசியுசிடம் ஓர் ஆயரையும், சில மறைப்பணிக் குருக்களையும் எத்தியோப்பியாவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். முதுபெரும் தந்தை புனித அத்தனாசியுசும், Fruementius அவர்களையே ஆயராக நியமித்தார். ஆயர் Frumentius முதலில் அரசர் Ezanaவை மனந்திருப்பினார். இந்த அரசர் எத்தியோப்பியா எங்கும் ஆலயங்களைக் கட்டி கிறிஸ்தவம் பரவ உதவினார். Frumentius, Aedesius ஆகிய இருவரும் எத்தியோப்பியாவின் திருத்தூதர்கள் என அழைக்கப்படுகின்றனர். புனித Frumentius விழா அக்டோபர் 27.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.