அக்.22,2014. சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களைப் பேணுவதில் காட்டப்படும் அக்கறையே,
ஒரு நாட்டின் கலாச்சாரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதன் அளவுகோலாக அமைகிறது என்று வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர் கூறினார். உரோம் நகரில் புகழ்பெற்ற குழந்தை இயேசு குழந்தைகள்
மருத்துவமனையின் ஆய்வுப் பிரிவொன்றை அக்டோபர் 21, இச்செவ்வாயன்று அசீர்வதித்து, திறந்து
வைத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்த மருத்துவமனையுடன்
திருத்தந்தையர் கொண்டிருக்கும் உறவு குறித்துப் பேசினார். திருத்தந்தையரின் நேரடி
ஆதரவில் இயங்கும் குழந்தை இயேசு மருத்துவமனை, பிறரன்பு பணிகளில் மட்டுமல்லாமல், சீரிய,
மேன்மையான நன்னெறியுடன் கூடிய மருத்துவ முன்னேற்றங்களில் முதன்மை இடம் பெறவேண்டும் என்று
கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார். திருத்தந்தை 11ம் பயஸ்
துவங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் முடிய அனைத்துத் திருத்தந்தையரும் குழந்தைகள் மட்டில்
காட்டிவரும் அக்கறையின் ஒரு அடையாளமாக குழந்தை இயேசு மருத்துவமனை அமைந்துள்ளது என்று
கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.