திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் பொதுமக்கள் இயக்கங்கள் கூட்டம்
அக்.21,2014. திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, இம்மாதம் 27 முதல் 29 வரை உலக பொதுமக்கள்
இயக்கங்களின் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. திருப்பீட சமூக அறிவியல் துறை மற்றும் பொதுமக்கள்
இயக்கங்களின் தலைவர்களின் ஒத்துழைப்புடன் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை நடத்தும்
இக்கூட்டம், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக
இடம்பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உரிமைகள் அல்லது தொழிற்சங்கங்களால்
பாதுகாக்கப்படாத குடியேற்றதாரர், சுயமாக வேலைசெய்வோர், வேலையில் பாதுகாப்பை இழக்கும்
ஆபத்தை எதிர்நோக்குவோர், நிலமற்ற விவசாயிகள், பழங்குடியினத்தவர், வன்முறையாலும் நிலஅபகரிப்பாலும்
தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவோர், சேரிகளில் வாழ்வோர்,
போதுமான உள்கட்டமைப்பு வசதிகளின்றி வாழ்வோர் போன்றோருக்கான பொது அமைப்புகளின் நூற்றுக்கும்
மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.