ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு குழந்தை வீதம் கொல்லப்படுகின்றது, யூனிசெப்
அக்.21,2014. உலகில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு குழந்தை வீதம் வன்முறையால்
கொல்லப்படுகின்றது என்று. ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் கூறியது. யூனிசெப்
அமைப்பின் பிரித்தானியக் கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டில் வன்முறையால்
இருபது வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 345 பேர் தினமும் இறப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இருபது
வயதுக்குட்பட்ட இலட்சக்கணக்கான இளம் வயதினர் தங்களின் வீடுகள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில்
பாதுகாப்பின்றி உள்ளனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, அனைத்துவிதமான உரிமை மீறல்களும் 2030ம்
ஆண்டுக்குள் நிறுத்தப்படுவதற்கு புதிய யுக்திகள் கையாளப்படுமாறு வலியுறுத்தியுள்ளது. 41
நாடுகளில் மட்டுமே சிறார்க்கெதிரான வன்முறை தெளிவான முறையில் தடைசெய்யப்பட்டுள்ளன என்று
கூறும் அவ்வறிக்கை, வளர்இளம் பருவச் சிறுவன் ஒருவன் பிரித்தானியாவில் ஒருமுறை எதிர்கொள்ளும்
கொலை நடவடிக்கையைவிட இலத்தீன் அமெரிக்காவில் அவன் எழுபது தடவைகள் அதனை எதிர்கொள்கிறான்
என்று கூறியுள்ளது.