2014-10-18 15:34:24

ஆசியா பீபியின் மரணதண்டனை குறித்து இந்திய, பாகிஸ்தானியத் திருஅவைத் தலைவர்கள் கண்டனம்


அக்.18,2014. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றத்தின்பேரில் 2010ம் ஆண்டில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவத் தாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது குறித்த தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் இந்திய மற்றும் பாகிஸ்தானியத் திருஅவைத் தலைவர்கள்.
இறைவாக்கினர் முகமது அவர்களை அவமதித்தார் என்று 50 வயதான ஆசியா பீபி குற்றம் சாட்டப்பட்டு, 2010ம் ஆண்டு நவம்பரில் லாகூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்தது. இவ்வழக்கு குறித்து விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் இவ்வியாழனன்று அத்தண்டனையை உறுதிசெய்துள்ளது.
இது குறித்து தனது கண்டனத்தை வெளியிட்ட பூனே ஆயர் தாமஸ் தாப்ரே அவர்கள், இத்தீர்ப்பு, அனைத்துவிதமான மனித மற்றும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரானது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இத்தண்டனையும், தெய்வநிந்தனை குறித்த சட்டங்களும் இரத்துசெய்யப்படுவதற்கு அனைத்துலக அதிகாரிகள் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் தாப்ரே.
மேலும், பாகிஸ்தான் இராணுவ சர்வாதிகாரி முகமது சியா-உல்-ஹக் அவர்கள், 1980களில் அமல்படுத்திய தெய்வநிந்தனை குறித்த சட்டங்கள் திருத்தியமைக்கப்படுமாறு அனைத்துலக மற்றும் பாகிஸ்தானிய மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இஞ்ஞாயிறன்று செபம் மற்றும் உண்ணாநோன்பை கடைப்பிடிக்கவுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.