உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம், பான் கி மூன்
அக்.17,2014. ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், உலகினர் எல்லாருக்கும் வளமை என்ற நோக்கத்துடன்,
உலகில் நிலவும் கடும் வறுமைக்கெதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்
எனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். அக்டோபர் 17, இவ்வெள்ளியன்று
கடைப்பிடிக்கப்பட்ட உலக வறுமை ஒழிப்பு தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.நா.வின்
வறுமை ஒழிப்புத் திட்டத்தில் அனைவரும் ஈடுபடுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன். “ஒருவர்கூட
வறுமையில் இருக்கக்கூடாது : வறுமைக்கு எதிரான நடவடிக்கை குறித்துச் சிந்தித்து, தீர்மானித்து
ஒன்றிணைந்து செயல்படுதல்” என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இத்தினம் 1993ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் எய்ட்ஸ், மலேரியா,
ஷயரோகம், போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களைவிட வறுமையினால் இறப்பவர்களே அதிகம். உலகில்
ஏறக்குறைய 80 கோடியே 50 இலட்சம் பேர், அதாவது ஒன்பது பேருக்கு ஒருவர் வீதம் பசியினால்
துன்புறுகின்றனர், எனினும், கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் பசியாய் இருக்கும் மக்களின்
எண்ணிக்கை பத்து கோடிக்குமேல் குறைந்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.