வாரனாசி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் பாட்ரிக் டி சூசா இறைவனடி எய்தினார்
அக்.16,2014. இந்தியாவின் வாரனாசி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் பாட்ரிக் பால் டி சூசா
அவர்கள், அக்.16, இவ்வியாழன் காலையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
1928ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி மங்களூரின் பன்டூரில் பிறந்த ஆயர் பாட்ரிக் டி சூசா
அவர்கள், 1953ம் ஆண்டில் குருவாகவும், 1970ம் ஆண்டில் ஆயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டார். 1970ம்
ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியன்று வாரனாசி கோரக்பூர் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றார்
ஆயர் பாட்ரிக் டி சூசா. அச்சமயத்தில் இவர் இளவயதில் ஆயராக பணியேற்றவராக இருந்தார். இவர்
தனது மறைமாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியத் திருஅவைக்கும் பல வழிகளில் பணியாற்றியுள்ளார்.
37 ஆண்டுகள் ஆயராக பணியாற்றிய பின்னர் 2007ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பணி ஓய்வு பெற்றார்
ஆயர் பாட்ரிக் டி சூசா. 1956ம் ஆண்டில் உரோமில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர்
ஆயர் பாட்ரிக் டி சூசா. இவரின் சகோதர சகோதரிகள் 15 பேர். ஆயர் பாட்ரிக் டி சூசா அவர்களின்
அடக்கச்சடங்கு அக்.18, வருகிற சனிக்கிழமையன்று வாரனாசியில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.