2014-10-15 16:43:37

Ad Gentes கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டுக்கு Miao மறைமாவட்டம் தயாரிப்பு


அக்.15,2014. திருஅவையின் மறைப்பணி நடவடிக்கைகள் குறித்து விவரிக்கும் Ad Gentes இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏட்டின் அறிவுரைகளைத், தலத்திருஅவைகளில் செயல்படுத்துவது குறித்த தொடர் கருத்தரங்குகளை இந்தியாவின் மறைமாவட்டம் ஒன்று நடத்தி வருகிறது.
வடகிழக்கு இந்தியாவிலுள்ள Miao மறைமாவட்டம் நடத்தி வரும் தொடர் கருத்தரங்குகள் குறித்துப் பேசிய அம்மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் அவர்கள், கிறிஸ்துவை மக்கள் மத்தியில் அறியச் செய்வதற்கு நமக்கிருக்கும் பொறுப்புணர்வை இக்கருத்தரங்குகள் அதிகரிக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
கிறிஸ்துவை அறிவிப்பதற்கான ஆவலை அதிகரித்தல், துணிச்சலுடன் சான்று பகர்தல், ஏழைகளின் தோழமையில் செயல்படுதல், உரையாடல்மூலம் திருஅவையை இன்னும் காணக்கூடிய வகையில் சமூகத்தில் வெளிப்படுத்துதல், பிற மாநிலங்களுடன் நல்லுறவை வளர்த்தல், ஆயர்கள் மத்தியில் கூட்டுணர்வை ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளுடன் இக்கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக மேலும் கூறினார் ஆயர் பள்ளிப்பரம்பில்.
1965ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி வெளியிடபட்ட Ad Gentes கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டுக்குத் தயாரிப்பாக இக்கருத்தரங்குகளை நடத்தி வருகிறது Miao மறைமாவட்டம்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.