நொபெல் அமைதி விருது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக
உள்ளது
அக்.14,2014. ஓர் இந்தியருக்கும் ஒரு பாகிஸ்தானியருக்கும் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டிருப்பது,
இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதி ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது என்று தான் நம்புவதாகத்
தெரிவித்தார் இந்தியத் திருஅவைத் தலைவர் ஒருவர். கடந்த வெள்ளியன்று நொபெல் அமைதி விருதுக்
குழு அறிவித்துள்ளவர்களில் ஒருவர் இந்தியாவில் சிறார் உரிமைகளுக்காகவும், மற்றொருவர்
பாகிஸ்தானில் சிறார் உரிமைகளுக்காகவும் போராடுகின்றவர்கள், இதைத் தாங்கள் பெரிதும் வரவேற்பதாகக்
கூறினார் டில்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ. காஷ்மீர் நிலப்பகுதி குறித்து
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை இடம்பெற்றுவரும் இந்நாள்களில் இவ்விரு
நாட்டினருக்கும் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அமைதிக்கான செய்தியாக இருப்பதாக,
வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார் பேராயர் அனில் கூட்டோ. நாங்கள்
போரை விரும்பவில்லை, தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளால் எந்த நாடும் கட்டுப்படுத்தப்படுவதையும்
நாங்கள் விரும்பவில்லை என்று கூறிய டில்லி பேராயர், மத்திய கிழக்கில் பரவியுள்ள தீவிரவாதம்
இந்தியாவிலும் பரவக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆல்பிரட் நொபெல்
அவர்களின் 118வது இறந்த நாளான வருகிற டிசம்பர் 10ம் தேதி 2014ம் ஆண்டின் நொபெல் விருதுகள்
வழங்கப்படும்.