2014-10-14 16:23:03

கிராமப்புறப் பெண்கள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்துசக்தி, ஐ.நா.


அக்.14,2014. கிராமப்புறப் பெண்கள் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக இருப்பதால், 2015ம் ஆண்டில் மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடைவதற்கான நம் முயற்சிகளுக்கு கிராமப்புறப் பெண்களின் சக்தியைப் பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
வறுமை, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களுக்குக் கிராமப்புறப் பெண்கள் முதலில் பாதிப்புக்கு உள்ளாவதால், வளர்ச்சித் திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார் பான் கி மூன்.
அக்டோபர் 15, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படும் உலக கிராமப்புறப் பெண்கள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், வளரும் நாடுகளில் வேளாண்மையில் நாற்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட உழைப்பைக் கொடுப்பவர்கள் கிராமப்புறப் பெண்கள் என்றும் கூறியுள்ளார்.
பெரும்பான்மையான கிராமப்புறப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வேளாண்மையையும், இயற்கை வளங்களையும் சார்ந்திருக்கின்றனர் என்றும், உலகில் பசியைப் போக்கி, வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இப்பெண்களால் நிறைய உதவ முடியும் என்றும் கூறினார் பான் கி மூன்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.