அக்.13,2014. திருஅவை தொடர்ந்து தன் மறைபோதகப்பணியை ஆற்ற வேண்டும், இல்லையெனில் அது முடங்கியதாக,
நோயில் வீழ்ந்துவிடும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருஅவைக்குப் புதிதாகக்
கிடைத்த புனிதர்கள் François de Laval மற்றும் Marie de l'Incarnation குறித்து, இஞ்ஞாயிறு
காலை தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நன்றித் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், நற்செய்திக்குப் பணிபுரியும் மறைபோதகர்கள் குறைந்துவரும் இந்நாள்களில் கடந்த
காலங்களில் மறைப்பணியாற்றியவர்களின் நினைவுகள் நமக்கு உரமூட்டுகின்றன என்று கூறினார்.
இன்றையக் காலத்திலும் நற்செய்தியைப் பரப்புவதில் தங்கள் உயிரையும் கையளிக்கப் பலர்
தயாராக இருப்பதையும், பலர் நற்செய்திக்காகக் கொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை,
இத்தகையோரின் எடுத்துக்காட்டான வாழ்வே திருஅவையை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறது
என்று கூறினார். ஒவ்வொருவரும் துணிச்சலைக் கைவிடாமல் செயல்படுவோம், அதேவேளை மேலும்
மறைபோதகர்களைத் தருமாறு இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம் என தனது மறையுரையில் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.