ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நவம்பர் 25ல் திருத்தந்தை
அக்.07,2014. வருகிற நவம்பர் 25ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Strasburg நகரத்துக்கு
ஒரு நாள் திருப்பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றத்திலும், ஐரோப்பிய அவையிலும் உரைகள்
நிகழ்த்துவார் என்று திருப்பீடம் இச்செவ்வாயன்று அறிவித்தது. 2014ம் ஆண்டு நவம்பர்
25, செவ்வாய்க்கிழமை காலை 7.55 மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து
புறப்படும் திருத்தந்தை, காலை பத்து மணிக்கு பிரான்ஸ் நாட்டின் Strasburg பன்னாட்டு விமான
நிலையம் சென்றடைவார். காலை 10.35 மணிக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்திலும், 12.05 மணிக்கு
ஐரோப்பிய அவையிலும் உரைகள் ஆற்றிய பின்னர் மதியம் 1.50 மணிக்குப் புறப்பட்டு, 3.50 மணிக்கு
உரோம் வந்துசேர்வார் திருத்தந்தை என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி
அறிவித்தார். இன்னும், 2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ்
செல்வார் எனவும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். மேலும், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் டுவிட்டரில், வாரும் தூய ஆவியே, இம்மாமன்றக் காலத்தில்
உமது கொடைகளை எங்கள்மீது பொழிந்தருளும், மாமன்றத்திற்காகச் செபிப்போம் என்ற வார்த்தைகளை
வெளியிட்டுள்ளார்.