2014-10-01 16:16:27

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட கிறிஸ்தவப் போதகர் உயிரோடு இருக்கிறார்


அக்.01,2014. ராவல்பிண்டியின் Adyala சிறையில், தெய்வநிந்தனைக் குற்றத்தின்பேரில், 2012ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சிறைவைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் போதகர் Zafar Bhatti அவர்கள் கொலைசெய்யப்படவுமில்லை, காயமடையவுமில்லை என பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஆணைய இயக்குனர் செசில் ஷேன் சவுத்ரி அவர்கள், பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள தகவல்படி, பாகிஸ்தானில் அண்மை நாள்களில் 45 வயதான கிறிஸ்தவப் போதகர் Zafar Bhatti பற்றி தவறுதலாகச் செய்தி வெளியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆயர்களின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் சில அலுவலகர்கள் Adyala சிறைக்குச் சென்று Zafar Bhattiயுடனும், அவரது குடும்பத்தினருடனும், நேரிடையாகப் பேசியுள்ளனர் என்று செசில் ஷேன் கூறியுள்ளார்.
மனிதாபிமானப் பணியாளர்களும், அதிகம் பொறுப்புள்ள பத்திரிகையாளர்களும் பாகிஸ்தான் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர் என்றும் செசில் ஷேன் கூறியுள்ளார்.
மேலும், இதே குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முஹம்மத் அஸ்கர் என்பவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவித்தார் செசில் ஷேன் சவுத்ரி.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.