செப்.30,2014. உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, சமூகத்தில், அவர்களின்
பங்கும் குறிப்பிடும்படியான அளவில் அதிகரித்துவருவதாக, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்
அவர்களின் செய்தி கூறுகிறது. அக்டோபர் 01, இப்புதனன்று சிறப்பிக்கப்படும், உலக முதியோர்
நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் வயதானவர்களின் எண்ணிக்கை இருமடங்குக்கும்
அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன். 2013ம்
ஆண்டில் 84 கோடியே பத்து இலட்சமாக இருந்த வயதானவர்களின் எண்ணிக்கை, 2050ம் ஆண்டில் இருநூறு
கோடிக்கும் அதிகமாகும் என்றும், அவ்வாண்டில் உலகின் முதியோரில் பத்துக்கு ஏறக்குறைய எட்டுப்
பேர் வீதம் வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வாழ்வார்கள் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார். வயதானவர்கள்,
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு, தங்களின் பங்கீட்டை அதிகமாக வழங்கி வருகின்றபோதிலும்,
அவர்களுக்கெதிரான சமூகப் பாகுபாடும், புறக்கணிப்பும் இடம்பெறுகின்றன, இந்நிலை அகற்றப்பட
வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.