செப்.29,2014. விவிலியத்தின் புதிய பொதுமொழிபெயர்ப்பில் ஈடுபடும் கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த
முயற்சி குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒருவர்
ஒருவரிடையேயான நம்பிக்கையின்மைகளை வெற்றிகொண்டு, அவர்களுடன் ஒன்றிணைந்து நடைபோட்டு கடந்த
பல ஆண்டுகளாக பொதுமொழிபெயர்ப்பில் ஈடுபட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளையும் பாராட்டுவதாகத்
தெரிவித்த திருத்தந்தை, பொறுமை, அக்கறை, சகோதரத்துவம், திறமை, விசுவாசம் ஆகியவைகளின்
பலனாக இந்த புதிய மொழிபெயர்ப்பு கிடைத்துள்ளது எனவும் தன்னை சந்தித்த விவிலியக் கழகங்களின்
கூட்டமைப்பின் அங்கத்தினர்களிடம் இத்திங்கள் காலை எடுத்துரைத்தார். விவிலியத்தைப் பற்றிய
அறியாமையைக் கொண்டிருப்பது என்பது கிறிஸ்துவைக் குறித்த அறியாமையைக் கொண்டிருப்பதாகும்
என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அனைத்துக் கிறிஸ்தவர்களும் விவிலியத்தை
வாசிப்பதை உறுதிசெய்யவேண்டிய கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.