2014-09-29 15:50:20

திருத்தந்தை : வானதூதர்கள் நம்மைப் பாதுகாப்பவர்கள்


செப்.29,2014. நல்லவைகள் போல் திட்டங்கள் பலவற்றை முன்வைத்து நம்மை அழிவுக்குள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தீயோனின் செயல்களிலிருந்து நம்மைக் காப்பவர்கள் வானதூதர்களே என இத்திங்கள் காலை மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட அதிதூதர்கள் மிக்கேல், இரஃபேல் மற்றும் கபிரியேலின் திருவிழாவை மையமாக வைத்து தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
வார்த்தை மனுவானார் என்ற இறைவனின் உன்னத மறையுண்மையைப் போற்றி பாதுகாக்கும் வானதூதர்களே நம்மையும் சாத்தானின் இடர்களிலிருந்து காப்பவர்கள் என தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீயோனுடன் ஆன போராட்டம் நம் வாழ்வில் தினமும் இடம்பெறும் ஓர் உண்மை நிலை, தீயோனை எதிர்த்து நாம் போரிடவில்லையெனில் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்பதை உணர்ந்தே, போராடி வெற்றிபெறும் பணியை நம் சார்பாக வானதூதர்களிடம் இறைவன் ஒப்படைத்துள்ளார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.