கிறிஸ்தவப் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் கண்டனம்
செப்.27,2014. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் பொய்யானக் குற்றச்சாட்டில் இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவப் போதகர் ஒருவர்
காவல்துறை மனிதர் ஒருவரால் சிறைக்குள்ளேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதற்குத் தங்களின்
வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் ஆயர்கள். இவ்வன்செயல் குறித்துப் பேசிய பாகிஸ்தான்
ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர் செசில் ஷேன் சவுத்ரி அவர்கள், கொலை
செய்யப்பட்டுள்ள Zafar Bhatti என்ற கிறிஸ்தவப் போதகர் ஏற்கனவே சிறைக்காவலர்களாலும் உடன்
கைதிகளாலும் மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தார் எனவும் கூறினார். ராவல்பிண்டியின் Adyala
சிறையில், கிறிஸ்தவப் போதகர் Zafar Bhattiயின் உடல் குண்டுக் துழைத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு ஜூலை மாதம் தேவ நிந்தனைக்குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட 45 வயதான
Zafar Bhatti மீதான குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை
என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது. மேலும், இதே குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனையை
எதிர்நோக்கியிருக்கும் முஹம்மத் அஸ்கர் என்பவர், படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவித்தார்
செசில் ஷேன் சவுத்ரி.