இலங்கையில் தொடரும் சித்ரவதைகள் குறித்து ஐ.நாவுக்கு அறிக்கை
செப்.25,2014. இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக சித்ரவதைகள் நடைபெறுவதாக
பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. போர்
முடிவடைந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற 40 கடுமையான சித்ரவதைச் சம்பவங்கள் தொடர்பாக இந்த
அமைப்பு ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பார்வைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கடந்த நான்கு
வருடங்களில் இடம்பெற்ற ஏறத்தாழ 160 சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களையும் சமர்ப்பித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுவோர்மீது
கடுமையான சித்ரவதைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்
என்றும், இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சித்ரவதைகளில் இருந்து விடுபட்ட சுதந்திரமான
சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பன்னாட்டு மருத்துவர்களின்
கழகம் பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.