செப்.24,2014. 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான
மக்கள் காலரா போன்ற தொற்றுநோய்களுக்குப் பலியான ஹெய்ட்டி நாட்டில் சுற்றுச்சூழலுக்கு
உகந்த கழிப்பிடங்கள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் காலராத்
தொற்றுநோய்க்கு 9 ஆயிரம் பேர்வரை பலியானவேளை, இந்நோய் பரவுவதற்கு அழுக்கடைந்த நீரும்
மாசடைந்த சுற்றுச்சூழலுமே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இங்கு வாழும் ஆயிரக்கணக்கான
மக்கள் மத்தியில் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில் சுற்றுச்சூழலுக்குச் சாதகமான கழிப்பிடங்களை,
தொண்டு நிறுவனம் ஒன்று அமைத்து வருகின்றது. ஒவ்வொரு தடவை பயன்படுத்திய பின்னரும்,
கரும்புச் சக்கையை மேலே போட்டுவிடுவதன் மூலம் கிருமித்தொற்று அபாயத்தைக் குறைப்பதுதான்
இந்தக் கழிப்பறையில் உள்ள வித்தியாசம். அதன்பின்னர், மலக்கழிவுகள் ஓரிடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு,
கடுமையான வெப்பத்தின் மூலம் ஆபத்தான நுண்கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். இந்தக் கழிவுகள்
இயற்கை உரமாக மாற்றப்பட்டு தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.