திருத்தந்தை : எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்துலக உதவிக்கு விண்ணப்பம்
செப்.24,2014. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய்க் கிருமிகளின் பாதிப்பால் பெருந்துன்பங்களை
அனுபவித்துவரும் மக்களுக்கு ஆற்றப்படும் உதவிகள் மேலும் அதிகரிக்கப்படுமாறு திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று விண்ணப்பித்தார். இப்புதன் பொது மறையுரைக்குப் பின்னர்,
ஆப்ரிக்காவில் எபோலா நோயால் கடும் துன்பங்களை எதிர்கொள்ளும் மக்களை நினைவுகூர்ந்ததுடன்,
இந்நோயால் இறந்துள்ள மக்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. மேலும்,
எபோலா நோய்த் தாக்கம் கடுமையாய் உள்ள கினி, சியெரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய மேற்கு
ஆப்ரிக்க நாடுகளில் இந்நோயால் துன்புறும் மக்களை கடந்த 24 மணி நேரத்துக்குள் இரண்டு தடவைகள்
நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை. இச்செவ்வாயன்று வத்திக்கானில் மேற்கு ஆப்ரிக்க
நாடாகிய கானா ஆயர்களைச் சந்தித்தபோது இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைவுகூர்ந்தார்
திருத்தந்தை. இதற்கிடையே, எபோலா நோய்க் கிருமித் தாக்குதலைக் கட்டுப்படுத்தாவிட்டால்,
இன்னும் இரண்டு மாதங்களில், இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமாக
உயர்ந்து விடும்; இந்நோயைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என, உலக நலவாழ்வு
நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நோய்க்கு, இதுவரை 2,800 பேர் பலியாகியுள்ளனர். எபோலா
நோய்க் கிருமித் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு, தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு,
குமட்டல், உடலின் உள்உறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகளில் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள்
இருக்கும்.