2014-09-23 16:13:50

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வு எளிமையானது


செப்.23,2014. கிறிஸ்தவ வாழ்வு என்பது இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தும் எளிய வாழ்வாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை(லூக்.8:19-21) மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், யாரும் புரிந்துகொள்ள முடியாத வகையில், நாம் பல காரியங்களுக்கு, மிகப் பல விளக்கங்களை அளித்து அவற்றைக் கடினமாக்குகின்றோம், ஆனால், இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து அதை நடைமுறைப்படுத்துவதே கிறிஸ்தவ வாழ்வு என்று கூறினார் திருத்தந்தை .
இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைக் காணச் சென்றார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அவர்களால் அணுகமுடியவில்லை. கிறிஸ்து மக்கள்திரளிடம் அதிகாரத்தோடு பேசியது அவர்களுக்குப் புதியதாக இருந்தது, இதனாலே அவரை மக்கள் பெருந்திரளாகப் பின்சென்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
தங்கள் இதயத்தில் அவ்வளவாகத் தூய்மையின்றி, தங்களது வசதிக்காகப் இயேசுவைப் பின்சென்றவர்களும் இருந்தனர், கொஞ்சம் நல்லவர்களாக வாழலாம் என்ற ஆவலில் ஒருவேளை இவர்கள் பின்சென்றிருக்கலாம், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சிறிதளவே மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று விளக்கினார் திருத்தந்தை.
தங்களுக்குக் கிடைத்த புதிய நலவாழ்வில் மகிழ்ந்த அந்த ஒன்பது தொழுநோயாளர் போல இன்றும் பலர் இயேசுவின் வார்த்தையைக் கேட்டுவிட்டு பின்னர் மறந்துவிடுகின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒவ்வொரு தடவையும் நற்செய்தியைத் திறந்து ஒரு பகுதியை நாம் வாசிக்கும்போது இப்பகுதி எனக்கு என்ன சொல்கின்றது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், அதில் இயேசு எதுவும் கூறினால் அவர் கூறுவது என்ன என அறிய வேண்டும், இவ்வாறு இறைவார்த்தையை நம் காதுகளிலும் இதயங்களிலும் கேட்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் இறைவார்த்தையைக் கேட்டு, பின்னர் அவரை மறுதலிப்பவர்களையும் அவர் வரவேற்கிறார், ஆண்டவரே உமது கட்டளைகளின் பாதையில் எம்மை வழிநடத்தும் எனச் செபிப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.