திருமண நடைமுறைகளை ஆய்வுசெய்வதற்கென புதிய வத்திக்கான் குழு
செப்.20,2014. திருமண அருளடையாளம் சார்ந்த கத்தோலிக்கத் திருஅவையின் நடைமுறைகள் மற்றும்
சட்டச் சீர்திருத்தம் குறித்து ஆய்வுசெய்வதற்கென புதிய வத்திக்கான் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். திருமணத்தின் முறிவுபடாதன்மை, தம்பதியருக்குத் திருமண விலக்கு
அளிக்கும் நடைமுறைகள் ஆகியவை குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகள் உட்பட திருமணம்
சார்ந்த பல விவகாரங்களை இப்புதிய குழு ஆய்வு செய்யும் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்
அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி இச்சனிக்கிழமையன்று கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று உருவாக்கியுள்ள இக்குழுவில், கர்தினால்கள், ஆயர்கள்
மற்றும் இறையியலாளர்கள் உள்ளனர். ரோத்தா ரொமனா என்ற திருஅவையின் உச்சநீதிமன்ற நீதிபதிகளில்
ஒருவரான தமிழகத்தைச் சார்ந்த பேரருள்திரு லியோ சேவியர் ஆரோக்யராஜ் அவர்களும் இக்குழுவில்
ஒருவராவார்.