செப்.20,2014. இஞ்ஞாயிறன்று இத்தாலிக்கு வெளியே ஐரோப்பாவுக்கான தனது முதல் திருப்பயணத்தை
மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள அல்பேனியாவின்
அன்னை தெரேசா பன்னாட்டு விமானநிலையத்தை இஞ்ஞாயிறு காலை 9 மணிக்குச் சென்றடையும் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு அரசுத்தலைவரை முதலில் சந்திப்பார். பின்னர், தலைநகர்
திரானா அன்னை தெரேசா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார், மாலையில் அந்நாட்டின் பல்சமய
மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுவார். அருள்பணியாளர்கள்,
துறவிகள் மற்றும் பொதுநிலையினருடன் மாலை திருப்புகழ்மாலை செபிப்பார், பின்னர் பெத்தானியா
இல்லத்தில் சிறாரைச் சந்திப்பார். அல்பேனியாவுக்கு மேற்கொள்ளும் ஒருநாள் திருப்பயணத்தில்
இந்நிகழ்வுகளை நிறைவுசெய்து இரவு 9.30 மணிக்கு உரோம் வந்துசேர்வார் திருத்தந்தை. உரோமுக்கு
610 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அல்பேனியாவுக்கு, 1993ம் ஆண்டில் புனித திருத்தந்தை
2ம் ஜான் பால் அவர்கள் திருப்பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இஞ்ஞாயிறன்று அந்நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார். அருளாளர் அன்னை
தெரேசா பிறந்த அல்பேனியா, 1967ல் தன்னை நாத்திக நாடாக அறிவித்தது. உலகில் முதல் நாத்திக
நாடாக அறிவிக்கப்பட்ட அல்பேனியாவில் 1944ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை ஏறத்தாழ ஐம்பது
ஆண்டுகள் கம்யூனிச ஆட்சி நடந்தது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் சமய சுதந்திரம்
இருந்து வருகின்றது.