செப்.19,2014. அர்மேனிய நாட்டு அரசுத்தலைவர் Serzh Sargsyan அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் தனியேயும், தனது குழுவினருடனும் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட
நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்
அர்மேனிய அரசுத்தலைவர் Sargsyan. அர்மேனிய சமுதாயத்தின் வரலாற்றிலும் வாழ்விலும் கிறிஸ்தவத்தின்
சிறப்புப் பங்கு குறித்தும், குறிப்பிட்டு, அந்நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே
நிலவும் உறவுகள் தொடர்ந்து உறுதியடைந்து வருவது குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக,
திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. அர்மேனியப் பகுதியின் அரசியல் சூழல் குறித்தும்
இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாகத் தெரிவித்த அவ்வலுவலகம், குழப்பமும், தீர்வும் காணப்படாத
விவகாரங்கள், பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்வு காணப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டதாக
கூறியது. மத்திய கிழக்குப் பகுதி விவகாரம், அப்பகுதியில் கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மை
மதத்தவரும் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் போன்ற விவகாரங்களுக்கு இச்சந்திப்புக்களில்
சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டன எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.