மனம் திறந்து பாவங்களை ஏற்கும்போது, அதன்வழி இயேசு நுழைவார்
செப்.18,2014. நம் பாவங்களை நாம் ஏற்றுக்கொள்வதே, இயேசுவின் கனிவான வருடலுக்கான கதவுகளைத்
திறக்கின்றது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா
இல்லச் சிற்றாலத்தில் இவ்வியாழனன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரும்பாவியாகிய பெண் ஒருவர் இயேசுவின் பாதத்தை நறுமண
தைலத்தால் கழுவிய நிகழ்வை எடுத்துரைத்த அந்நாளின் வாசகம் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார். தான்
பாவி என்பதை உணர்ந்து தன் பாவங்களுக்காக கண்ணீர் சிந்திய அந்தப் பெண்ணைப் பார்த்து இயேசு,
'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நீ அமைதியாகச் செல். உன் விசுவாசம் உன்னை காப்பாற்றியுள்ளது'
என்று கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பாவி என்பதை ஏற்றுக்கொள்ளும்போதே மீட்பு
நம்மை வந்தடைகிறது என்றார். நாம் நம் பாவங்களை உணர்ந்து அதனை அறிக்கையிட நம் இதயத்தைத்
திறக்கும்போதுதான் இயேசுவை அங்கு சந்திக்க முடியும், மற்றும் அந்தத் திறந்த கதவு வழியாக
அவர் நுழையவும் முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.