செப்.18,2014. தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்கள் எவ்வளவு பெரிய பாவிகளாக இருந்தாலும்
அவர்களை மன்னித்து அவர்களுக்கு புதியதொரு தொடக்கத்தை வழங்கும்வண்ணம் அவர்களை அன்புகூர
வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த ஆண்டு உலகின் பல்வேறு
பகுதிகளில் நியமிக்கப்பட்ட புதிய ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், ஒவ்வோர் ஆயரும் ஒரு நல்ல தந்தையாகவும், ஒரு நல்ல மேய்ப்பராகவும் செயல்பட்டு
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை வரவேற்பவர்களாகவும், அவர்களுக்குச் செவிமடுத்து அவர்களை
வழிநடத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களை வழிநடத்தும்
பயணத்தில் மோசேக்கு இருந்த பொறுமையுடன் செயல்படுமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, ஆயர்கள்
தங்கள் சக்தி அனைத்தையும் தங்களுக்காக அல்லாமல், கடவுளின் வழிநடத்தலுக்காகப் பயன்படுத்துமாறும்
அழைப்புவிடுத்தார். இன்றைய உலகின் இறகுகளாக இருக்கும் இளையோரிலும், வேர்களாக இருக்கும்
முதியோரிலும் சிறப்புக்கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் புதிய ஆயர்களிடம்
வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.