திருத்தந்தை துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது, துருக்கி
ஆயர் பேரவைத் தலைவர்
செப்.13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு
கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்திக்கவிருக்கும்
செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார் துருக்கி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர்
Ruggero Franceschini. புனித அந்திரேயாவின் விழாவான நவம்பர் 30ம் தேதியன்று திருத்தந்தையின்
இத்திருப்பயணம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய Smirne
பேராயர் Franceschini அவர்கள், திருத்தந்தையின் இத்திருப்பயணம் துருக்கி தலத்திருஅவையின்
வாழ்வுக்கு மாபெரும் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். துருக்கி
நாட்டில் கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்ந்தாலும் பலர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என்றும்,
SIR செய்தி நிறுவனத்திடம் கூறினார் பேராயர் Franceschini. துருக்கி நாட்டு அரசுத்தலைவர்
Recep Tayyp Erdogan அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வருகிற நவம்பரில் துருக்கி செல்கிறார் என, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்தந்தை
பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வெள்ளியன்று அறிவித்தார். இயேசுவின் திருத்தூதர்களில்
ஒருவரான புனித அந்திரேயா, ஆர்த்தடாக்ஸ் உலகின் பாதுகாவலரும், கீழை வழிபாட்டுமுறையை உருவாக்கியவருமாவார்.
இப்புனிதரின் விழா நவம்பர் 30. இந்த விழாநாளில் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதி
குழு ஆண்டுதோறும் இஸ்தான்புல் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. 2006ம் ஆண்டு நவம்பரில்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் துருக்கிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார்.