இருபது தம்பதியருக்கு திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.13,2014. உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இருபது தம்பதியருக்கு, திருமணம் எனும் அருளடையாளத்தை
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் இஞ்ஞாயிறன்று நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருவிழாவாகிய இஞ்ஞாயிறு காலையில் திருத்தந்தை நிறைவேற்றும்
திருப்பலியில், உரோம் மறைமாவட்ட கர்தினால், இத்தம்பதியரின் பங்குத் தந்தையர்கள், உறவினர்கள்
எனப் பலர் கலந்து கொள்வார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திருமணம் செய்து
வைக்கப்படுவது குறித்துப் பேசிய இத்தம்பதியர், திருத்தந்தையின் கரங்களால் தாங்கள் இந்த
அருளடையாளத்தைப் பெற வேண்டுமென்ற கனவு நனவாகப் போகிறது என்று தெரிவித்தனர். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை, கடந்த பிப்ரவரி 14ம் தேதி வலென்டைன் நாளையொட்டி சந்தித்ததிலிருந்து
திருத்தந்தை தங்கள் வாழ்வை அதிகம் பாதித்துள்ளார் எனவும் இவர்கள் கூறினர். மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பாவங்கள் இருக்கின்றபோதிலும், ஆண்டவரே, நான் உம்மை
அன்புகூருகிறேன் என்பது உமக்குத் தெரியுமே என்று புனித பேதுருவுடன் சேர்ந்து நம்மால்
சொல்ல முடியும் என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.