நேபாள அரசு குடியேற்றதாரரிடம் : கிறிஸ்தவ நாடுகளைத் தேர்ந்தெடுங்கள்
செப்.11,2014. தனது நாட்டுக் குடிமக்களை வன்முறை மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து காப்பாற்றும்
நோக்கத்தில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ள நேபாள அரசு, வேலைதேடிச் செல்லும் நேபாள
மக்கள் அரபு நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து கிறிஸ்தவ நாடுகளுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளது. அரபு
நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு சவப்பெட்டி வீதம் நேபாளத்துக்கு வந்துகொண்டிருப்பதைக்
குறிப்பிட்டுப் பேசியுள்ள நேபாள தொழில்துறை அமைச்சர் Tek Bahadur Gurung அவர்கள், வேலை
தேடிச் செல்லும் தனது நாட்டினர் ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். நேபாளக்
குடியேற்றதாரர்கள் அரபு நாடுகளில் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவ்வமைச்சர்
கூறினார். வேலை தேடிச் செல்லும் நேபாள மக்கள், தற்போது மலேசியா, சவுதி அரேபியா, கத்தார்,
ஐக்கிய அரபு குடியரசு, குவைத் ஆகிய நாடுகளுக்கே பெருமாளவாகச் செல்கின்றனர். ஏறக்குறைய
இருபது இலட்சம் நேபாளத்தவர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.