பிலடெல்ஃபியா உலக குடும்பங்கள் மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வச் செபம் வெளியீடு
செப்.09,2014. அடுத்த ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்ஃபியாவில் நடக்கவிருக்கும்
உலக குடும்பங்கள் மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வச் செபமும் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளன. 2015ம்
ஆண்டில் நடக்கும் உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பயணிகளை ஆன்மீக வழியில்
தயாரிக்கும் நோக்கத்துடன் இச்செபம் வெளியிடப்பட்டுள்ளதாக, பிலடெல்ஃபியா பேராயர் சார்லஸ்
சாபுட் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறினார். அன்பே நமது பணி, குடும்பம் நிறைவாக
வாழ என்ற தலைப்புடன் 18 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இச்செபம், கடவுளோடும் நம் குடும்பங்களோடும்
உள்ள உறவுகளை அர்த்தமான வழிகளில் ஆழப்படுத்த உதவும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்
பேராயர் சாபுட். 2015ம் ஆண்டு, செப்டம்பர் 22 முதல் 27 வரை பிலடெல்ஃபியாவில் 8வது
உலக குடும்பங்கள் மாநாடு நடக்கவிருக்கிறது. 1994ம் ஆண்டில் உலக குடும்ப ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டபோது
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கத்தோலிக்க உலக குடும்பங்கள் மாநாட்டை உருவாக்கினார்.