2014-09-09 16:22:33

ஐஎஸ் இஸ்லாமிய நாடு சிறாரைத் தற்கொலைக் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்துகின்றது, ஐ.நா.


செப்.09,2014. ஐஎஸ் இஸ்லாமிய நாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் குறைந்தது 700 சிறாரைக் கொலைசெய்துள்ளனர் அல்லது உறுப்புக்களை இழக்கச்செய்துள்ளனர் என்று ஐ.நா. பிரிதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நா.வின் சிறார் மற்றும் ஆயுத மோதல்கள் பிரிவின் துணை சிறப்புப் பிரதிநிதி Leila Zerrougui அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவ்வாறு அறிவித்தார்.
ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகள், தாக்குதல்களை நடத்துவதற்குச் சிறாரைத் தற்கொலைக் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்துகின்றனர் மற்றும் அவர்களை கொத்தாகக் கொலைசெய்கின்றனர் என்றும் அறிவித்தார் Zerrougui.
ஆயுதங்களை எடுத்துச் செல்லவும், ஆயுதக் கிடங்குகளைக் கண்காணிக்கவும், குடிமக்களைத் தடுத்துவைக்கவும் 13 வயதுக்குட்பட்ட சிறாரை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்றுரைத்த Zerrougui, போர் மற்றும் நோய்களால் மேலும் மூன்று கோடிச் சிறார் கல்வி பெறும் உரிமையை இழந்துள்ளனர் என்றும் கூறினார்.
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டையில், கடந்த மாதத்தில் மட்டும் 1,420 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,370 பேர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. கடந்த ஆண்டில் வன்முறைக்குப் பயந்து குறைந்தது 16 இலட்சம் ஈராக்கியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.