செப்.08,2014. புருண்டி நாட்டில் பணியாற்றிவந்த மூன்று அருள்சகோதரிகள் இஞ்ஞாயிறன்று கொலைச்
செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சார்ந்திருக்கும் சவேரியன் துறவு சபை அறிவித்துள்ளது. 75
வயதன அருள்சகோதரி Lucia Pulici என்பவரையும் 82 வயதான Olga Raschietti என்பவரையும் ஞாயிறு
பகலில் புஜும்புரா துறவு இல்லத்தில் கொலைச்செய்துவிட்டு அங்கேயே பதுங்கியிருந்த கொலைகாரர்,
அன்றிரவே இந்த அருள்சகோதரிகளைத் தேடிச்சென்ற 79 வயதான Bernadetta Boggian என்பவரையும்
கொலைசெய்துவிட்டுத் தப்பியுள்ளார். இந்த அருள்சகோதரிகளின் மரணம் குறித்து திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை சவேரியன் துறவுசபைக்கு
அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின். சவேரியன் துறவுசபையைச்
சேர்ந்த இந்த இத்தாலிய அருள்சகோதரிகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆப்ரிக்கக் கண்டத்தில் சேவையாற்றியுள்ளனர்.