2014-09-08 15:59:32

திருத்தந்தை: நாமும் பாவிகள் என்பதை ஏற்று அதன் அடிப்படையில் பிறரை மன்னிப்போம்


செப்.08,2014. பாவிகளாகிய நமக்கு கடவுளின் மன்னிப்பு தேவை என்பதை மனதில் கொண்டவர்களாக, நம் சகோதரர்களின் தவறுகளைத் திருத்துவதை நாம் அணுக வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் சகோதரர்களைத் திருத்துவதை ஒரு சேவையாக நாம் நோக்க வேண்டும், அதுவும் நாமும் பாவிகளே என்பதை ஏற்றுக்கொள்ளும்போது இச்செயல் மிகவும் பலனுள்ளதாக மாறுகின்றது என இஞ்ஞாயிறு மூவேளை செபவுரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவறிழைத்த ஒரு கிறிஸ்தவரைத் திருத்துவது என்பது அவருக்கும் சமூகத்திற்கும் செய்யப்படும் சேவையாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பிறரை அநீதியான முறையில் விமர்சனம் செய்வது என்பது அவர் நற்பெயரைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும் எனவும் எடுத்துரைத்தார்.
தவறிழைக்கும் சகோதரனை எவ்வாறு திருத்துவது என இயேசு கூறுவதை உரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றமிழைத்தவரை தனியாக அழைத்துத் திருத்தப் பாருங்கள், அவரை வசைபாடாதீர்கள், அது கிறிஸ்தவக் குணமன்று என மேலும் கூறினார்.
ஒருவரைத் தீர்ப்பிடுவது நம் பணியன்று, மாறாக நாமும் பாவிகள் என்பதன் அடிப்படையில் நம் மன்னிப்பு அணுகுமுறை இருக்கவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.