திருத்தந்தை: அன்னைமரியின் மகிழ்வு, சேவை மற்றும் உறுதிப்பாட்டைப் பின்பற்றுவோம்
செப்.08,2014. அன்னைமரி மீதான பக்தி முயற்சிகளில் நிலைத்து நிற்போம் என தன் வாழ்த்துக்களை
வெளியிட்டு கியூபா நாட்டிற்கு சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்களன்று
கியூபாவில் சிறப்பிக்கப்பட்ட அந்நாட்டுப் பாதுகாவலியான El Cobre பிறரன்பின் அன்னை திருவிழாவை
முன்னிட்டு அந்நாட்டுப் பேராயர் Dionisio Garcia Ibanez வழி வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ள
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் மூன்று சிறப்புப் பண்புகளையும் அதில்
குறிப்பிட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவைக் கருத்தரித்தபோது அன்னமரி அடைந்த மகிழ்ச்சி,
வயது முதிர்ந்த தன் உறவினர் எலிசபெத்துக்கு அவர் விரைந்து சென்று உதவியது, தன் வாழ்நாள்
முழுவதும் தன் மகனுக்கான அர்ப்பணத்தில் நிலைத்திருந்தது என மூன்று உயர் பண்புகளை தன்
செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய பண்புகளை அனைவரும்
பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.