ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பகைமைச் செயல்கள் மதம் மற்றும் இன அழிப்பின் மீதான போர், La Civilta
Cattolica
செப்.06,2014. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள
ஐஎஸ்ஐஎஸ் முஸ்லிம் தீவிரவாதிகளின் பகைமைச் செயல்கள் மதம் மற்றும் இன அழிப்பின் மீதான
போர் என்று குற்றம் சாட்டியுள்ளது La Civilta Cattolica இதழ். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின்
நடவடிக்கைகள் குறித்து தனது ஆசிரியர் பகுதியில் அலசியுள்ள இயேசு சபையினரின் இந்த La Civilta
Cattolica இதழ், இந்த அமைப்பினர் அறிவித்துள்ள இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக இராணுவப் பதிலடி
தேவை எனப் பரிந்துரைத்துள்ளது. இஸ்லாமிய மரபின் பயங்கரவாதக் கருத்துருவாக்கத்தை அனைத்து
முஸ்லிம்களின் இதயங்களிலிருந்து அழிப்பதற்கு உலகின் எல்லா இஸ்லாமியத் தலைவர்களுக்கும்
கடமை உள்ளது என்பதையும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால்
கைப்பற்றப்பட்டுள்ள ஈராக்கிய பகுதிகளை மீட்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை, ஐ.நா. படைகளை
அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவரும் நினிவே பகுதியை மீட்பதற்கு ஈராக்
பாதுகாப்புப் படைகள் மற்றும் குர்திஸ்தான் படைகளோடு ஐ.நா. படைகளும் இணைந்து செயல்படுமாறு
கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.