2014-09-04 16:30:44

மாபியா கும்பல்களுக்கு எதிராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளருக்கு, முழுமையான ஆதரவு வழங்கும் இத்தாலிய ஆயர் பேரவை


செப்.04,2014. இத்தாலியில் இயங்கிவரும் மாபியா கும்பல்களுக்கு எதிராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளர் Luigi Ciotti அவர்களுக்கு, தங்கள் முழுமையான ஆதரவு உண்டு என்று, இத்தாலிய ஆயர் பேரவை, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாபியா கும்பல்களின் அநீதிகளைத் தட்டிகேட்கும் நோக்கத்துடன், இத்தாலியில், Abele மற்றும் Libera என்ற இரு அமைப்புக்களை உருவாக்கி, பணியாற்றி வருபவர், அருள்பணி Luigi Ciotti அவர்கள்.
அண்மையில், அருள்பணி Luigi Ciotti அவர்கலுக்கு, Totò Riina என்ற மாபியா தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, இத்தாலிய ஆயர் பேரவையின் சார்பில், அதன் தலைவர், கர்தினால் அஞ்சேலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இந்த ஆதரவு மடலை வெளியிட்டுள்ளார்.
மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள், விவிலிய விழுமியங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு மார்ச் மாதம் கூறிய வார்த்தைகளை, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மாபியா கும்பல்களுக்கு எதிராக திருத்தந்தை அவர்கள் கூறிவரும் கருத்துக்கள், திருஅவைக்குள் மட்டுமல்லாமல், மாபியா கும்பல்களுக்கு எதிராக, துணிவுமிக்க செயல்களை மேற்கொள்ள, இத்தாலியில் இயங்கும் Carabinieri என்ற காவல்துறையினர் மத்தியிலும் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன என்று ANSA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.