காசாப் பகுதி,இரண்டாம் உலகப் போரில் அழிந்து தரைமட்டமான நகர்களைப்
போல் விளங்குகிறது - ஆயர் ஷொமாலி
செப்.03,2014. காசாப் பகுதியை பார்க்கும்போது, இரண்டாம் உலகப் போரில் அழிந்து தரைமட்டமான
நகர்களைப் போல் அப்பகுதி விளங்குகிறது என்று எருசலேம் லத்தீன் வழிபாட்டு முறை ஆயர் வில்லியம்
ஷொமாலி அவர்கள் கூறினார். காசாப் பகுதியில் உள்ள Sajaya என்ற மாவட்டத்தில் 80 விழுக்காட்டிற்கும்
அதிகமான வீடுகளும் ஏனையக் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதைக் கண்டபோது, இரண்டாம்
உலகப் போர் முடிந்தபின் இருந்த நிலையை உணர முடிந்தது என்று ஆயர் ஷொமாலி அவர்கள் எடுத்துரைத்தார். காசாப்
பகுதியில் உதவிகள் மேற்கொண்டு வரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் பெயரால் அப்பகுதியைப்
பார்வையிடச் சென்ற எருசலேம் கத்தோலிக்க ஆயரும் அருள் பணியாளர்களும் அப்பகுதி மக்கள் இஸ்ரேல்
நாட்டின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த வெறுப்புணர்வைக் களைய அதிக நாட்களாகும் என்று கூறினர். இஸ்ரேல்
இராணுவத்தால் தாக்குதல்கள் நடைபெற்றுவந்தபோதும், காசாப் பகுதியில் மக்களுக்குத் தொடர்ந்து
நற்பணிகள் ஆற்றிவந்த பல்வேறு அருள் சகோதரிகளுக்கும், அருள் பணியாளர்களுக்கும் ஆயர் ஷொமாலி
அவர்கள் தன் நன்றியைத் தெரிவித்தார்.