2014-09-03 15:45:53

ஆர்த்தடாக்ஸ் திருஅவையினர் துவங்கியுள்ள கருத்தரங்கிற்கு, திருத்தந்தை வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி


செப்.03,2014. "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற கருத்துடன் ஆர்த்தடாக்ஸ் திருஅவையினர் துவங்கியுள்ள கருத்தரங்கு இன்றைய மிக அவசியமான ஒரு தேவையை உணர்ந்த கருத்தரங்காக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியில் அமைத்துள்ள Bose என்ற துறவு மடத்தில் செப்டம்பர் 3, இப்புதன் முதல் 6ம் தேதி, சனிக்கிழமை முடிய நடைபெறும் 22வது பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு திருத்தந்தை வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் அமைதியின் தூதர்களாக வாழமுடியும் என்பதை இக்கருத்தரங்கின்போது நடைபெறும் ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் உலகிற்கு எடுத்துரைப்பதாக என்று திருத்தந்தை தன் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.
பல்வேறு பிரிவினர்களிடையே நிலவிவரும் வேறுபாடுகளால் வளர்ந்துவரும் சந்தேக மனப்பான்மை குறைந்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வழிமுறைகள் வளர்வதற்கு இக்கருத்தரங்கு வழிவகுக்கட்டும் என்ற ஆசீர் மொழிகளையும் திருத்தந்தையின் செய்தி தாங்கிச் சென்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.