20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்பு : ஐ.நா.,வில் இந்திய நடிகை வருத்தம்
ஆக.30,2014. இந்தியாவில், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாகவும்,
இந்த கொடுமையை தடுத்து நிறுத்த ஆண்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் முடியும்
என இந்திய நடிகை Mallika Sherawat, ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றினார். ஐக்கிய
நாடுகள் அவையின் பொது தகவல் துறை சார்பில், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வியறிவு
போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய நடிகை Sherawat, இந்தியாவில்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க அரசும், நீதித்துறையும்
எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், இந்த கொடூர சம்பவங்களைக் குறைக்க முடியவில்லை
என்ற கவலையை வெளியிட்டார். ஜாதி பிரச்னை, ஆணாதிக்க சமுதாயம் போன்றவையும், இக்கொடுமைக்குக்
காரணமாக அமைந்துள்ளன என ஐ.நா.வில் பேசிய நடிகை Sherawat, ஏராளமானோர் கல்வியறிவு பெற்ற
போதிலும், குழந்தை திருமணங்களும் இந்தியாவில் அதிக அளவில் இடம்பெறுவதையும் தடுக்கமுடியவில்லை
என்று கூறினார்.