2014-08-29 15:16:04

துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti


ஆக.29,2014. உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 27ம் தேதி, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வழங்கிய புதன் பொது மறையுரைக்குப் பின்னர், Paul Bhatti அவர்கள் தன் அன்னையுடன் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, Paul Bhatti அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், தன் அன்னை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தது அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பல்வேறு துன்பங்கள் குறித்து உலகச் சமுதாயம் மௌனம் காப்பது குறித்தும், இஸ்லாமியக் குழந்தைகளை வெறுப்பில் வளர்த்துவரும் ஒரு சில இஸ்லாமியத் தலைவர்கள் குறித்தும் Paul Bhatti அவர்கள் தன் பேட்டியில் கவலை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் சார்பில் பல்வேறு பிரச்சனைகளை அரசிடம் கூறிவந்த Shabhaz Bhatti அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபின்னர், அவரது சகோதரர் Paul Bhatti அவர்கள், பாகிஸ்தான் அரசின் அமைச்சர்களில் ஒருவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.