2014-08-28 16:24:33

திருத்தந்தை பிரான்சிஸ் - நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து சொல்லித் தருகிறார்


ஆக.28,2014. நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து நமக்குச் சொல்லித் தருகிறார் என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.
மேலும், சிலுவையில் அறையப்பட்டுள்ள கிறிஸ்துவின் பெயராலும், வாழ்வின் ஊற்றாகிய தந்தையின் பெயராலும், அன்பின் ஆவியாரின் பெயராலும் கருணை, நீதி ஆகியவற்றிற்காக உங்களிடம் விண்ணப்பிக்கிறோம் என்று கனடா நாட்டு ஆயர்கள் ஒரு விண்ணப்ப மடலை வெளியிட்டுள்ளனர்.
கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Paul-André Durocher, மற்றும் ஆயர் பேரவை பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த மடல், மத்தியக் கிழக்குப் பகுதியின் ஈராக், சிரியா, புனித பூமி ஆகிய நாடுகளிலும், உக்ரைன் மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் அமைதி நிரந்தரமாகத் திரும்பிட அழைப்பு விடுக்கிறது.
அறையப்பட்ட கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்ற அடிப்படையில், துன்புறும் அனைவரோடும் தங்களை ஒன்றிணைத்து, ஆயர்கள் விடுத்துள்ள இந்த விண்ணப்பம், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் குழுவினர், ஏனைய கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மற்றும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.