தான் போதித்த புண்ணியங்களை தன் வாழ்வாக்கியவர், திருத்தந்தை முதலாம்
ஜான்பால் - கர்தினால் Beniamino Stella
ஆக.27,2014. தான் போதித்த எளிமை, பிறரன்பு, கீழ்ப்படிதல் ஆகிய புண்ணியங்களை தன் வாழ்வாக்கியவர்,
திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 1978ம்
ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி கர்தினால் Albino Luciani அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன்
36ம் ஆண்டு நினைவையொட்டி, அருள் பணியாளர்கள் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Beniamino
Stella அவர்கள் இச்செவ்வாயன்று திருப்பலி நிறைவேற்றுகையில், தன் மறையுரையில் இவ்வாறு
கூறினார். திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த ஊரான Agordoவில் புனித திருமுழுக்கு
யோவான் பங்குக் கோவிலில் இச்செவ்வாய் மாலை திருப்பலியாற்றிய கர்தினால் Stella அவர்கள்,
திருத்தந்தை லுசியானி அவர்கள், அருள் பணியாளர்களுக்குத் தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டாக
என்றும் வாழ்வார் என்று கூறினார். திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களிடம் விளங்கிய
எளிமை, பிறரன்பு, கீழ்ப்படிதல் ஆகிய புண்ணியங்களை மையமாகக் கொண்டு கர்தினால் Stella அவர்கள்
தன் மறையுரையை வழங்கினார். 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற
முதலாம் ஜான்பால் அவர்கள், 'புன்முறுவல் பூக்கும் திருத்தந்தை' என்ற பெயருடன், 33 நாட்களே
தலைமைப் பணியாற்றியபின், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி இறையடி சேர்ந்தார்.