கர்தினால் பெர்னாண்டோ பிலோனி, வாஷிங்க்டன் நகரில் கீழை வழிபாட்டு முறை
முதுபெரும் தந்தையரைச் சந்திக்கவுள்ளார்
ஆக.27,2014. திருத்தந்தையின் சார்பாக அண்மையில், ஈராக் நாட்டிற்குப் பயணம் செய்து திரும்பிய
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள்,
விரைவில் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரைச்
சந்திப்பார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஜெனீவாவில் இயங்கிவரும்
ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றிவரும் பேராயர் சில்வானோ தொமாசி
அவர்கள், இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் ஒரு மாநாட்டில் செய்தியாளர்களிடம் இதனைத்
தெரிவித்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரில் கர்தினால் பிலோனி அவர்களுக்கும்,
கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையருக்கும் இடையே நடைபெறும் இச்சந்திப்பில், கீழை
வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களும் கலந்துகொள்வார்
என்று பேராயர் தொமாசி கூறினார். ஈராக்கில் நடைபெற்றுவரும் பிரச்சனைகளில், அமெரிக்க
அரசையும், இன்னும் உலகத் தலைவர்களையும் ஈடுபடுத்த, அமெரிக்க ஆயர்கள் தங்கள் குரலை எழுப்பவேண்டும்
என்பதை வலியுறுத்த கர்தினால்கள் பிலோனி அவர்களும், சாந்த்ரி அவர்களும் விண்ணப்பங்கள்
எழுப்புவர் என்று பேராயர் தொமாசி அவர்கள் தெரிவித்தார்.