ஈராக்கில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தடையின்றி வந்துகொண்டிருக்கின்றன
- முதுபெரும் தந்தை சாக்கோ
ஆக.26,2014. ஈராக்கின் Erbil மற்றும் Dohok மாநிலங்களில், புலம்பெயர்ந்துள்ள மக்களின்
நிலை, யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாக, அங்கு சென்று திரும்பியுள்ள
கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Raphael Louis Sako அவர்கள் கூறினார். ஈராக்
கிறிஸ்தவர்களும், ஏனைய சிறுபான்மை மதத்தவரும் எதிர்நோக்கிவரும் துன்ப நிலைகளை அறிந்தும்,
அனைத்துலக சமூகம் அக்கறையின்றி இருப்பது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட முதுபெரும்
தந்தை சாக்கோ அவர்கள், இந்த நெருக்கடிக்கு எவ்விதத் தீர்வும் காணப்படாத நிலையில், இஸ்லாமியத்
தீவிரவாதிகளுக்குத் தேவையான நிதி உதவிகளும், ஆயுதங்களும் தடையின்றி வந்துகொண்டிருப்பதையும்
சுட்டிக்காட்டினார். இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு பயந்து, ஈராக்கின் சிறுபான்மை மதத்தவர்
உலகின் நான்கு மூலைகளுக்கும் அடைக்கலம் தேடி ஓடிக் கொண்டிருப்பது, அவர்களின் வரலாறு,
பாரம்பரியம், மற்றும் தனித்தன்மை சிதறிப் போகும் ஆபத்தை உருவாக்குகிறது என்றும் முதுபெரும்
தந்தை சாக்கோ அவர்கள் கவலையை வெளியிட்டார்.