Haiyan சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரித்தாஸ் அமைப்பின் 1 கோடியே, 20
இலட்சம் டாலர்கள் நிதி உதவி
ஆக.26,2014. கடந்த ஆண்டு இறுதியில், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய Haiyan சூறாவளிப்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென்று 1 கோடியே, 20 இலட்சம் டாலர்கள் நிதியைத்
திரட்டியுள்ளது அந்நாட்டின் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு. 9 மறைமாவட்டங்களில்
வாழும் 118 சமூகங்களைச் சேர்ந்த 1,41,000 பேருக்கு இதுவரை உதவியுள்ளதாக கூறும் பிலிப்பின்ஸ்
காரித்தாஸ் அமைப்பு, எத்தகைய இயற்கைப் பேரிடர்களின் மத்தியிலும், மக்கள் நம்பிக்கை இழக்காமல்
செயல்படவேண்டும் என்பதை இது காண்பிக்கிறது என்று எடுத்துரைத்தது. கடந்த ஆண்டு நவம்பர்
8ம் தேதி தாக்கிய இச்சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்குமிடம், நலவாழ்வு
வசதிகள், பொருளுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதில் தனிப்பட்ட கவனம்
செலுத்தி வருகிறது, பிலிப்பின்ஸ் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு. Haiyan சூறாவளிப்
புயலால் 1 கோடியே, 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புனரமைப்புப் பணிகளுக்கு
800 கோடி டாலர்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.