ஆக.25,2014. தங்கள் மதபோதக அர்ப்பணத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கும் விதமாக இம்மாத மத்தியில்
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வியட்நாம் கத்தோலிக்கர்கள் அந்நாட்டின் லா வாங் அன்னை மரி
திருத்தலத்திற்கு திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர். 'குடும்ப வாழ்வின் நற்செய்தி அறிவித்தல்'
என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆன்மீகப்பயணத்தில் அந்நாட்டு பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லியுடன்
தலத்திருஅவை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மூன்று நாட்களாக இடம்பெற்ற திருப்பயணம்
மற்றும் அன்னை மரி விழாக் கொண்டாட்டங்கள், அந்நாட்டு கிறிஸ்தவர்களின் உயிர்துடிப்பான
விசுவாசத்தின் எடுத்துக்காட்டாக இருந்ததென செய்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
லா வாங் மரியன்னை திருத்தலத்திற்குச் சென்று செபிக்கும் பழக்கம் 18ம் நூற்றாண்டில்
துவங்கி, கம்யூனிச அடக்குமுறைகளையும் தாண்டி, தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.